ஓவி­யாவும், பிந்து மாத­வியும் என் தோழிகள் - விமல் ‌பேட்டி!!

தமிழ் சினிமாவின் பட்ஜெட் தயாரிப்பாளர்களின் மோஸ்ட் வான்ட்டடு ஹீரோ யார் என்றால் அதில் முதலிடம் பெறுபவர் விமல் தான். களவாணி படத்தின் மூலம் பிரபலமான விமல், தொடர்ந்து தூங்காநகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது எழில் இயக்கத்தில் ‌இவர் நடித்து வெளிவந்து இருக்கும் தேசிங்கு ராஜாவும் விமலுக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதுதவிர அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் விமல் அளித்த சிறப்பு பேட்டி...

* எந்த மாதிரி கதைகளுக்கு முதலிடம் தருகிறீர்கள்?

சீரியசான கதையாக இருந்தாலும், அதை, சிரிக்கும்படியாக வெளிப்படுத்தக் கூடிய கதைகளுக்கே, முதலிடம் கொடுக்கிறேன். ஏனென்றால், இப்போதைய ரசிகர்கள், இரண்டரை மணிநேரம் மனம்விட்டு சிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், தியேட்டருக்கு வருகின்றனர். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என,  நினைக்கிறேன்.

* ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோக்களுடன் நடிக்க தயங்குவதாக தெரிகிறதே?

அப்படியெல்லாம் எதுவுமில்லை. கதையில், என் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தால், எந்த படத்தையும் தவிர்ப்பதில்லை. என்னுடன் நடிக்கும் மற்ற ஹீரோக்களும், சிறப்பாக  நடிக்க வேண்டுமென்று,  விட்டுக்  கொடுக்கும் மனநிலை கொண்டவன், நான். அதனால், எனக்கு யார் மீதும், வெறுப்பு கிடையாது.

* முதலில், ஓவியா, இப்போது பிந்து மாதவி என, கிசுகிசுக்களில்  தொடர்ந்து சிக்குகிறீர்களே?

கிசுகிசுக்கள் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டன. ‘களவாணி, கலகலப்பு, சில்லென்று ஒரு சந்திப்பு’படங்களில் நடித்தபோது,  ஓவியாவுடன் இணைத்து பரவிய அதே கிசுகிசு, இப்போது, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா’வுக்கு பின், அப்படங்களில் என்னுடன் நடித்த பிந்து மாதவியை இணைத்து பரவியுள்ளது. ஆனால்,  இவர்கள் இருவருமே, எனக்கு நல்ல தோழிகள் தான். சக நடிகைகள் என்ற நட்பை தவிர, எங்களுக்குள் வேறு எதுவுமில்லை.

* வினுசக்கரவர்த்தி, உங்களை ஜூனியர் ஜெமினி கணேசன் என்று கூறியுள்ளாரே?

வினுசக்கரவர்த்தி சார் ரொம்ப பெரிய நடிகர். அவருக்கு, ‘தேசிங்கு ராஜா’ 1000வது படம். அப்படிப்பட்ட ஒரு நடிகரின் வாயிலிருந்து, இப்படியொரு வார்த்தை வர, நான்  கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னை, ‘ஜூனியர் ஜெமினி’ என்று அவர் கூறியதற்கு ரொம்ப பெருமைப்படுகிறேன்.

* படத்துக்கு படம், நீங்கள் சம்பளத்தை உயர்த்துவதாக புகார் வருகிறதே?

எந்த படத்திற்கும், இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று, நான் கேட்பதில்லை. தயாரிப்பாளர்கள் தான், இப்போது வரை, என் சம்பளத்தை நிர்ணயித்து வருகின்றனர். இது என்னை வைத்து படம் எடுப்பவர்களுக்கு தெரியும்.