பிரபுதேவாவை சிலையாக வடிக்கும் பாலிவுட் ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் பிரபுதேவாவின் நடனத்திற்கென்றே ஒரு தனி ரசிகர் வட்டம் உண்டு. இதுவரை தனது பெயருக்கு முன்பு எந்த பட்டத்தையும் சூட்டிக்கொள்ளாத பிரபுதேவாவுக்கு அவரது ரசிகர்கள் நடன சூறாவளி என்று பட்டம் வைத்துள்ளனர். இப்படி அவருக்கென ஒரு பெரும் ரசிகர் வட்டமே தென்னிந்தியாவில் இருப்பது போல் இப்போது பாலிவுட்டிலும் பிரபுதேவாவுக்கு ரசிகர் வட்டம் உருவாகி உள்ளதாம்.

தான் இயக்கும் படங்களில் ஏதாவது பாடல்களில் தோன்றி நடனமாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருப்பதால், அவரது நடனமும் அங்கு பிரபலமாகி வருகிறதாம். அதனால் இயக்குனராக, டான்சராக பிரபுதேவாவை ரசித்து வரும் மும்பை ரசிகர்கள் ஒன்று திரண்டு அவருக்கு ஒரு மெழுகுச்சிலை உருவாக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

அதுவும் லண்டன் மியூசியத்தில் உள்ள அமிதாப்பச்சன், சச்சின், ஐஸ்வர்யாராய், ஷாரூக்கான் போன்றவர்களின் சிலைகளுக்கு இணையாக பிரபுதேவாவிற்கும் உருவாக்குகிறார்களாம். இந்த சேதியறிந்து சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போய் விட்டாராம் பிரபுதேவா. இதையடுத்து, அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நிஜமாலுமே பாலிவுட் ரசிகர்கள் ரொம்ப பெருந்தன்மையானவர்கள்தான். அதேபோல் நானும் என் மனதில் அவர்களுக்கு பெரிய இடத்தை கொடுத்து விட்டேன் என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளாராம்